தேவி உனை……
பல்லவி
தேவி உனைப் பணிந்தேன் நீயே எனக்கருள்வாய்
மூவாசைப் பிணி போக்கும் முன் வினைப் பயன் நீக்கும்
அனுபல்வி
தேவன் சிவபெருமானிடம் கொண்ட நாயகியே
பூவுலகோர் போற்றும் கேசவன் சோதரியே
சரணங்கள்
ஆவலுடனடியார்க்கு அருளளிப்பவளே
மாவிடை வானன் நேசிக்கும் பத்தினியே
மேவிடும் அன்புடன் பக்தரைக் காப்பவளே
காவலாய் நின்றவர் கவலைகளைத் தீர்ப்பவளே
தேவி அன்னபூரணி பூரணமானவளே
பூவையே மலைமகளே பரமசிவன் துணைவியே
தேவரும் நான்முகனும் வணங்கிடும் ஈச்வரியே
பாவையே பருவங்களில் துதிக்கப் படுபவளே
சிவராத்திரி நவராத்திரி மோகராத்திரி என்றும்
புவனமே அழிந்திடும் காலராத்திரியுமான
சிவசக்தியே உமையே பிரணவப்பொருளே
சிவனை உபசரிக்கும் உமாமகேச்வரியே
அவனியை படைத்தவளே காப்பவளே அழிப்பவளே
தவம் புரியும் முனிவர்களால் துதிக்கப்படுபவளே
கவனமுடன் போற்றி வணங்கிடுமடியார்க்கு
உவந்து மங்களமும் முக்தியுமளிப்பவளே
தேவர்கள் படுந்துயரை போக்கியருள்பவளே
தேவர் குலம் காத்து அவரிடர் களைபவளே
தேவர்களுக்குதவிடும் திரிபுரசுந்தரியே
தேவர் முனிவர் பணி பதகமலமுடையவளே
புவனேச்வரியே முக்கண்ணுடையவளே
சுவர்ணமயமானவளே போகம் மோக்ஷம் தருபவளே
குவலயம் போற்றும் மகாமாயே
புவனம் கொண்டாடும் அகிலாண்டேச்வரியே
சரணடைந்தோர் நலன் காக்கும் சர்வேச்வரியே
அல்லலிடர் களையும் பராசக்தியே
அனைத்து வகை செல்வங்களும் அள்ளி அளிப்பவளே
மூவருக்கும் முதலான மூலப்பொருளே
“ஸ்ரீ தேவி அஷ்டகம்”
அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங் களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் தழுவி எழுதியது. ஸ்ரீஆதிசங் கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் துதியை, 'தேவ்ய இஷ்டகம்’ எனப் போற்றுவர்.
குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும். நவராத்திரி புண்ணிய காலத் தில் தினமும் இந்த துதிப் பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை வழிபடு வதால் சகல நன்மைகளும் கைகூடும்.